Sunday, August 28, 2016

ஆத்மாநாம் சர்ச்சை - அபிலாஷ் சந்திரன்

பிரம்மராஜன் – கல்யாணராமன் – ஆத்மாநாம் சர்ச்சை
(முகநூல் பதிவு - ஆகஸ்ட் 26 - 2016,  நேரம்: 10.28 PM)

பிரம்மராஜன் – கல்யாணராமன் – ஆத்மாநாம் சர்ச்சையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக் கொண்டு வருகிறேன். இப்போது அது சாதிய குற்றச்சாட்டு, தனிநபர் தாக்குதல் என வடிவெடுத்திருக்கிறது. இந்த பிரச்சனை”ஆதியில்” எப்படி இருந்தது?

கல்யாணராமன் காலச்சுவடில் ஒரு கட்டுரை எழுதினார்: “சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி”. இது பிரம்மராஜனின் தொகுப்பு முறை பற்றியது. இன்னும் துல்லியமாய் சொல்வதானால் அவரது எடிட்டிங் பற்றியது. அவர் எவ்வாறு ஆத்மாநாமின் கவிதைகளை நூலாக தொகுக்கும் போது அவற்றை பல இடங்களில் மூலத்தில் இருந்து மாற்றி இருக்கிறார் என கல்யாணராமன் ஒரு பெரிய பட்டியலே தருகிறார். எனக்கு இதில் வரும் மூலக் கவிதை வரிகளையும் மாற்றப்பட்ட வரிகளையும் ஒப்பிடும் போது மாற்றப்பட்ட வரிகளே மேல் எனப் பட்டது.
“கூர்மையான பக்கங்களைக்கொண்ட, புற்கள் தாறுமாறாய்ச், சிதறிக் காத்தன, ஏரியை”
என்கிற ஒரு கவிதை வரியில் ”புற்கள்” பிரம்மராஜனின் தொகுப்பில் “பற்கள்” ஆகி விட்டன. எனக்கு தாறுமாறாய் சிதறிக் கிடக்கும் பற்கள் கொண்ட ஏரிக்கரை என்பது இன்னும் அழகான, வித்தியாசமான, சர்ரியல் தன்மை கொண்ட சித்திரமாய் படுகிறது. இது எதேச்சையாய் நடந்த தவறு என்றாலும் கூட நல்ல தவறு தான்.
ஆத்மாநாமின் “ஒருவரும் அனுதாபத்துடன் நுணுகவில்லை” என்ற வரியை தொகுப்பாளர் பிரம்மராஜன் “ஒருவரும் அனுதாபத்துடன் அணுகவில்லை” என்று மாற்றி இருக்கிறார். நுணுகவில்லை என்பது ஒரு உருவகம். அது அவ்வரியை பாரமாக்கி விடுகிறது. ”அணுகவில்லை” இன்னும் நேரடியாய் மென்மையாய் இருக்கிறது. (நவீன கவிதையில் உருவகங்களை தவிர்ப்பதே நல்லது என்பது என் நம்பிக்கை) இதுவும் நல்ல மாற்றமே.
“இப்பரந்த உலகின் தூசி முனையில்” என்பதை “இப்பரந்த உலகின் ஊசி முனையில்” என மாற்றுகிறார். இதுவும் சிறப்பே. தூசிக்கு முனை உண்டா? தூசி உருளை வடிவென்றால் எப்படி அதற்கு முனை சாத்தியமாகும்? ஊசி முனை எனும் போது உடனே நமக்குள் ஒரு சித்திரம் எழுகிறது. பிரம்மராஜனின் மாற்றம் இவ்வரியை இன்னும் விஷுவலாக மாற்றி இருக்கிறது.
‘மற்றவரைத் தூண்டும் உன்னெழுத்து’ – ஆத்மாநாம் வரி
”‘மாற்றானைத் தூண்டும் உன்னெழுத்து’ – பிரம்மராஜன் திருத்திய ஆத்மாநாம் வரி
மற்றவரை விட மாற்றான் என்பதே இன்னும் ஆற்றல் மிக்கதாக எனக்கு படுகிறது. மற்றவர் என்பதை இன்னொருவர் என ஆத்மாநாம் கண்டிருக்க இயலாது. அரசியல் பொருளில் படிக்கையில் குறிப்பாய் மாற்றான் எனும் சொல்லே எனக்கு இன்னும் பிடித்தமாய் இருக்கிறது. எதிர்தரப்பு என்பதை விட மாற்று நிலை கொண்டவன் என்றே நான் மாற்றானை பார்க்கிறேன்.
இதே “சுதந்திரம்” எனும் எமெர்ஜன்ஸி பற்றின கவிதையில் வரும் மற்றொரு வரியான “உனதுயிர்மீது ஆசை இருந்தால்” எனபதை ““உன் மீது ஆசை இருந்தால்” என்று பிரம்மராஜன் மாற்றுகிறார். எமெர்ஜென்ஸி உயிர் மீதான ஒடுக்குமுறை அல்ல. சர்வாதிகாரத்தை ஆத்மாநாம் நம் இருப்பு சம்மந்தமான பிரச்சனையாகவும் தான் பார்த்தார். அப்படி இருக்கையில் “உன்” எனும் சொல் தான் “சுயம்” என்கிற பொருளில் பொருத்தமாய் இருக்கிறது. “உன் உயிர்” என்பது சற்றே பௌதிகமாக அதில் பேசப்படும் மனிதனை அர்த்தப்படுத்தி விடுகிறது.
“அருகில் கேட்கும், குழாயின் ஒழுகல்”
என்பதை
“இருளில் கேட்கும், குழாயின் ஒழுகல்” என பிரம்மராஜன் மாற்றியிருக்கிறார். இந்த திருத்தமும் அதிக விஷுவல் தன்மை கொண்டதே. ஒரு நல்ல மாற்றம் தான். அருகில் கேட்கும் குழாயின் ஒலியை விட இருளில் கேட்கும் ஒலியை கற்பனை செய்ய இன்னும் அணுக்கமாய் தீவிரமாய் அழகாய் உள்ளது.
”காலம் கடந்த” கவிதையின் இறுதி வரிகள் சிலவற்றை பிரம்மராஜன் நீக்கியிருக்கிறார்.
அக்கவிதை, “என் காலடியில், கொஞ்சும் நாய்க்குட்டிக்காக, இன்னும் எனது நம்பிக்கை, நசித்துப்போகவில்லை, இன்னமும் கொஞ்சம், அன்பு மீதமிருக்கிறது” என்று முடிகிறது.

ஆனால் உண்மையில் அது
“இது ஏசுவோ புத்தரோ
ஆதி சங்கரரோ
‘மகாத்மா’ காந்தியோ
பிரச்சாரம் செய்த
அன்பு அல்ல
நானே
ஆகிய
அன்பு”

என்று தான் முடிந்திருக்க வேண்டும். நீக்கப்பட்ட வரிகள் ஒரு statement என்பதை படிக்கும் எந்த வாசகனாலும் புரிந்து கொள்ள முடியும். கவிதை ஒரு அறிவிப்புடன், கவிஞனின் அறிவுறுத்தலுடன் முடிய வேண்டாம் என நினைத்து பிரம்மராஜன் நீக்கியிருக்க கூடும். இங்கும் அவர் எடிட்டிங் ஆத்மாநாமின் கவிதையை மேம்படுத்தி இருப்பதாகவே நினைக்கிறேன். முக்கியமான எந்த கூடுதல் பொருளும் தராத வரிகளை ஏன் நீக்கக் கூடாது?
‘டெலெக்ஸ்’ என்பதை ‘டெலக்ஸ்’ என்பதாக்கியது ஒரு பெரும் தவறு அல்ல. “1,74,843 தலைகள் வீழ்ந்துள்ளன” என்ற வரியில் 74,000 என்பதை பிரம்மராஜன் 75,000 என்று தவறாக மாற்றி இருக்கிறார். இது கவிதையின் அர்த்தத்தை மாற்றாது என்பதால் மன்னித்து விடலாம்.

சில கவிதைகளில் “ஒரு” என்பதை “ஓர்” என மாற்றுகிறார். ”சுவற்றில்” “சுவரில்” ஆகி விட்டது. இது போல் வேறு பல தொந்தரவு இல்லாத சிறு மாற்றங்கள். ஆத்மாநாமின் சில கவிதைகளின் தலைப்புகளை பிரம்மராஜன் மாற்றியதையும் கல்யாணராமன் குறிப்பிடுகிறார். இந்த இடங்களில் கவிதைகளை அத்தலைப்பு மாற்றங்கள் சீரழித்தன என்பதை விட ஆத்மாநாமின் சம்மதத்தை பெற்றாரா இல்லையா என்பதே கேள்வி.
ஒட்டுமொத்தமாய், பிரம்மராஜன் இந்த creative editing மூலமாய் ஆத்மாநாமுக்கு நல்லது பண்ணியிருப்பதாகவே நான் நம்புகிறேன். இதன் அறம் மட்டுமே பிரச்சனை. இதனை ஆத்மாநாம் ஏற்றிருப்பாரா இல்லையா? நமக்குத் தெரியாது.

இன்னொரு கேள்வி: ஒரு படைப்பை நாம் அதை எழுதிய படைப்பாளியின் சொத்தாக, அவனுக்கு மட்டுமே முழு உரிமை கொண்ட பொருளாக ஏன் பாவிக்க வேண்டும்? எனக்கு கடந்த மாத உயிர்மையில் வெளியான மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றை படிக்கையில் இறுதி சில வரிகளை கத்தரித்திருக்கலாமே என தோன்றியது. என் மனதுக்குள் அவ்வாறு எடிட் செய்து படித்து ரசித்தேன். நாளை நான் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை என் பாணியில் எடிட் செய்து பிரசுரிக்கலாமா? ஏன் கூடாது? ஒரு வாசகனாய் எனக்கு அந்த உரிமை, சுதந்திரம் நிச்சயம் உள்ளது.

ஒரு சிறு குறிப்பை மட்டும் இறுதியில் சேர்க்க வேண்டும்: “இது ஆசிரியரின் அனுமதி இன்றி சில மாறுதல்கள் செய்யப்பட்ட கவிதை”.
பிரம்மராஜன் இப்படியான குறிப்பை சேர்க்காதது தான் ஒரே தப்பு. அவர் அனுமதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவ்வாறே கூட குறிப்பை இணைத்திருக்கலாம். இதற்கு போய் அவரை ஏன் அடித்து துவைக்க வேண்டும் என எனக்கு சத்தியமாய் புரியவில்லை.

நான் குமுதம் கிரிக்கெட்டோகிராபியில் 3000 ரன்களை 4000 என எழுதியதற்காய் ஒருவர் ”என் கட்டுரையை படித்தால் தற்கொலை புரியும் எண்ணம் வருகிறது” என பேஸ்புக்கில் எழுதினார். இன்னொருவர் என்னை பேஸ்புக் முட்டுச்சந்துக்குள் வீச்சருவாளோடு விரட்டினார். பாவம் பிரம்மராஜன், அவரை ஆட்டோவில் ஆளுக்கு ஒரு கத்தியை சுழற்றியபடி வந்து துரத்துகிறார்கள்!

பின்னூட்டம்:

Saravanakarthikeyan Chinnadurai: சிறுகுறிப்பாக மட்டுமல்லாமல் புத்தகத்தின் தலைப்பிலேயே, அட்டையிலேயே கொட்டை எழுத்தில் தெளிவாய் இது இப்படி இன்னாரின் மாற்றத்திற்குட்பட்ட அன்னார் கவிதைகளின் தொகுப்பு எனக் குறிப்பிடப்பட வேண்டும். வாசகனுக்கு அதை அறியும் உரிமை இருக்கிறது. அவன் அதைக் கொண்டு நூலை வாங்கலாமா வேண்டாமா எனத் தன் ரசனையின் அடிப்படையில் தீர்மானிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஒருவேளை அந்த 'இன்னார்' அவனுக்கு உவப்பற்றவர் என்றால் அவன் அதைத் தவிர்க்கலாம். அல்லது அவர் (உங்களைப் போல்) இம்மாற்றங்களை விரும்புபவராக அல்லாமல், (என் போல்) "கோணலா இருந்தாலும் ஒரிஜினலாக்கும்" என்ற கருத்துடையவன் எனில் அதைத் தவிர்க்கலாம். ஆக, அதை மிக மிக வெளிப்படையாய் முன்வைப்பதே அறம். அன்றேல் சிட்னி ஷெல்டன் நாவல்களை ரா.கி.ரா. மொழிபெயர்த்ததை அட்டையில் அது பற்றி ஒரு குறிப்புமின்றி ரா.கி.ரா.வின் ஒரிஜினல் நாவல் போல் அச்சடித்து விற்கிறார்களே, அது போன்ற அயோக்கியத்தனமாகி விடும்.


அபிலாஷின் நிலைத்தகவலுக்கு கே.என். சிவராமனின் எதிர் விமர்சனம்:(முகநூல் பதிவு - ஆகஸ்ட் 27 - 2016,  நேரம்: 2.13 PM)

ஆத்மாநாம் - பிரம்மராஜன் Brammarajan Rajaram - 'காலச்சுவடு’ தொடர்பான ஆர்.அபிலாஷின் நிலைத்தகவல் விஷமத்தனமானது. ஏனெனில் அந்த ஸ்டேட்டஸ் முழுக்க முழுக்க பேராசிரியர் கல்யாணராமனின் கட்டுரையை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. அதாவது ‘மூலத்தில்’ இப்படி உள்ளது... அதற்கு பிரம்மராஜன் செய்திருக்கும் மாற்றங்கள் இப்படி இப்படி... என பேராசிரியர் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் அப்படியே ஏற்று, தன் தரப்பை அபிலாஷ் முன்வைத்திருக்கிறார்.

அதாவது, பிரம்மராஜனின் எடிட்டிங் சென்ஸ் சரியாக இருக்கிறதாம். அட்டையில் அதை குறிப்பிடாதது மட்டுமே தவறாம்.

//“இது ஆசிரியரின் அனுமதி இன்றி சில மாறுதல்கள் செய்யப்பட்ட கவிதை”.
பிரம்மராஜன் இப்படியான குறிப்பை சேர்க்காததுதான் ஒரே தப்பு. அவர் அனுமதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவ்வாறே கூட குறிப்பை இணைத்திருக்கலாம்.//

தீர்ப்பு எழுதியிருக்கிறார். Reading in between linesல் அவர் குறிப்பிடுவது, ‘காலச்சுவடு’ வெளியிட்ட கட்டுரை சரியானது என்பதே. ஒரேயொரு கேள்வி.

தனது நிலைத்தகவலின் ஆரம்ப வரிகளாக நடைபெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பான அனைத்தையும் வாசித்து வருகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். எனில் லதா ராமகிருஷ்ணன் Anaamikaa Rishi பதிவிட்ட நிலைத்தகவலையும் பார்த்திருக்க வேண்டும்... நண்பர் Pradhaba Rudhran ‘மீட்சி’ இதழை ஸ்கேன் செய்து போட்டு ‘மூலம்‘ என்று கல்யாணராமன் குறிப்பிட்டிருக்கும் வரிகளே பொய்யானதுதான் என அம்பலப்படுத்தி இருப்பதை வாசித்திருக்க வேண்டும். இவர்கள் இருவரும் நட்புப் பட்டியலில் இல்லாவிட்டாலும் பிரம்மராஜன் உட்பட பலரும் இவற்றை ஷேர் செய்திருக்கிறார்கள்.

எனவே சிறுபத்திரிகை சூழலில் புழங்கும் - முகநூலில் இருக்கும் - அனைவரது டைம் லைனிலும் ஏதோ ஒரு வடிவத்தில் இவை காட்சித் தந்திருக்கும். அதை எல்லாம் படித்துவிட்டுதான் தன் தீர்ப்பை - பிரம்மராஜன் செய்த ஒரே தப்பு!!! - அபிலாஷ் எழுதியிருக்கிறாரா? முதலில் கல்யாணராமன் சுட்டிக்காட்டியிருக்கிறாரே... ‘மூலம்’, ‘மூலம்’ என்று...

அவை எல்லாம் நிஜமாகவே ‘மூலம்’தானா என்பதை ஒருவராவது ஆராய்ந்து பார்த்தார்களா?
‘காலச்சுவடு’ இதழே அதை செய்யவில்லை என்பதைத்தானே ‘மீட்சி’ இதழின் ஸ்கேன் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன?

அட, இது போன்ற கட்டுரைகளை பிரசுரம் செய்யும் ஓர் இதழ், சாம்பிளுக்கு ‘மூல’ படைப்பில் ஒன்றையாவது ஸ்கேன் செய்து - ஒரிஜினல்; மாற்றப்பட்டது - என இரண்டும் பளிச்சென்று தெரியும் வகையில் லே அவுட் செய்யும் - வாசகர்களின் நம்பகத்தன்மைக்காக. 
இது போன்ற எதுவும் ‘ஆகஸ்ட் 2016’ ‘காலச்சுவடு’ இதழில் இல்லை.
பிரம்மராஜனை டி கிரேட் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அக்கட்டுரை எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதைதானே கேள்வி கேட்கிறோம்? பிறகு பிரம்மராஜன் விஷயத்தை சாதி சார்ந்து திசை திருப்பியவர் சாட்சாத் நண்பர்Krishna Prabhu கிருஷ்ண பிரபுதான்.

இதை ஒட்டுமொத்த முகநூல் நண்பர்களும் புரிந்து கொள்வது நல்லது. இது குறித்த சிறு குறிப்பு / கண்டனம் கூட அபிலாஷ் கட்டுரையில் இல்லை. மாறாக //இப்போது அது சாதிய குற்றச்சாட்டு, தனிநபர் தாக்குதல் என வடிவெடுத்திருக்கிறது. இந்த பிரச்சனை”ஆதியில்” எப்படி இருந்தது?// என ஆரம்பிக்கிறார்.
ஒருவேளை ‘காலச்சுவடு’ நோக்கி இவரும் நகர ஆரம்பிக்கிறாரோ... அல்லது அப்பதிப்பகத்தில் தன் நூல் வர துண்டு போட்டு இடம் பிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிலைத்தகவலை பதிவிட்டிருக்கிறாரோ...
அப்படியானால், மனமார்ந்த வாழ்த்துகள் அபிலாஷ்.
#காலச்சுவடுஅரசியல் #isupportbrammarajan #isupportbrammarajanrajaram#wesupportbrammarajan

கிருஷ்ண பிரபு: முகநூலில் சிவராமன் எழுதியிருந்ததைப் பகிரும்போது "ஒருவேளை இவரும் 'காலச்சுவடு' நோக்கி" என்பதை "ஒருவேளை இருவரும் (கிருஷ்ண பிரபு, அபிலாஷ்)..." என்று தவறுதலாகப் புரிந்துகொண்டு கீழ்கண்ட குறிப்பை எழுதியிருந்தேன்:

 சாதி சார்ந்து திசை திருப்பியது நானல்ல. சாட்சாத் கே. என். சிவராமனின் உசுப்பலின் பேரில்தான்.
பிரம்மராஜன் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள் என்றார் சிவராமன். தேடியதில் ஜெமோவின் பதிவு கிடைத்தது. நான்காம் படி இதழ் அதே காலகட்டத்தில் வந்துள்ளது என்பதையும் தெரிவித்தேன். உண்மையில் சிவராமனின் குருபீடம் ஜெமோ என்பது ஊரறிந்த விஷயம். ஜோமோ சொல்லியிருப்பது சார்ந்து மூச்சு விடாத சிவராமன் என்மீது பழியைத் தூக்கிப் போடுகிறார்.
காலச்சுசடில் புத்தகம் வர துண்டு போடுகிறேன் என்கிறார்.
இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஜீவகரிகாலன், கண்ணன், சிவசெந்தில்நாதன் எனப் பலரும் கேட்டுள்ளனர். இனிமேல்தான் முயற்சித்துத் துண்டு போட வேண்டும் என்பதில்லை. விவாதத்தை நுட்பமாக திசை திருப்பும் செயல் இது. அசிங்கமும் கூட.
என்னுடைய தவறினை யுவ கிருஷ்ணாவும் சிவராமனும் சுட்டிக்காட்டினார்கள். அதற்கு நான் எழுதிய முகநூல் பதிவு:

அபிலாஷ் குறித்த கே. என். சிவராமனின் சமீபத்திய பதிவைப் பகிரும் பொழுது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. அதை கவனத்திற்க்குக் கொண்டுவந்த யுவா & சிவராமன் ஆகியோருக்கு நன்றிகள்.
/இவரும் காலச்சுவடு நோக்கி நகர்கிறாரோ.../ என்று அபியை சிவராமன் குறிப்பிட்டிருக்கிறார். தவறுதலாக, 'இவரும்' என்பதை ஒரு 'ரு' சேர்த்து 'இருவரும்' என்று புரிந்துகொண்டு ஷேர் செய்துவிட்டேன்.
ஒரு வார்த்தை இடைச்செருகல் எவ்வளவு அபத்தப் புரிதலை உண்டாக்குகிறது பாருங்கள்.
தவறாகப் பகிர்ந்ததற்கு சிவராமனிடம் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்தும், வார்த்தையும் அர்த்தத்தை மாற்றுவது கண்கூடு. இது ஆத்மாநாம் கவிதைக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் பொருந்தும் போல.

அபிலாஷின் நிலைத்தகவலுக்கு கே.என். சிவராமன் எதிர் விமர்சனம் செய்திருந்ததற்குக் காலச்சுவடு பதிப்பகம் சார்ந்து வா. மனிகண்டனின் தன்னிலை விளக்கம்: (முகநூல் பதிவு - ஆகஸ்ட் 27 - 2016,  நேரம்: .......)



காலச்சுவடு பதிப்பகத்தை நோக்கி ஆர்.அபிலாஷ் நகர்கிறாரோ என்று கே.என்.சிவராமன் எழுதியிருக்கிறார். பிரச்சினையின் அடிநாதம் ஒரு இலக்கியச் சண்டை. அதனுள் நுழைகிற அளவுக்கு ஆர்வமில்லை. ஆனால் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக புத்தகம் வெளியிடுவதில் என்ன தவறு என்று தெரியவில்லை. என்னுடைய ஒரேயொரு புத்தகம் காலச்சுவடில் வெளி வந்திருக்கிறது. அதன் பிறகு நான்கு புத்தகங்கள் வேறு பதிப்பகங்கள் வழியாகத்தான் வெளியாகின. இவன் வேறு பதிப்பகத்துக்கு மாறிவிட்டான் என்று காலச்சுவடு இதுவரைக்கும் எந்தப் பாராமுகமும் காட்டியதில்லை. எவ்வளவு புத்தகங்கள் விற்றிருக்கின்றன, எவ்வளவு கணக்கு வழக்கு என்று துல்லியமாகத் தகவல் சொல்லிவிடுகிறார்கள். ஏதாவது கருத்தரங்குகள், விவாதங்கள் நிகழ்ந்தால் என்னுடையை பெயரையும் பரிந்துரை செய்யத் தயங்குவதேயில்லை. இந்த வருடம் கூட பப்ளிஷிங் நெக்ஸ்ட் கருத்தரங்கில் ஒரு போட்டிக்கான நடுவர் குழுவில் இடம் பெற்றிருக்கிறேன். இன்னமும் காலச்சுவடு பதிப்பகத்தில் எந்தப் புத்தகம் வாங்கினாலும் ‘நம்ம எழுத்தாளர்’ என்ற அடிப்படையில் இருபத்தைந்து முதல் முப்பது சதவீதம் கழிவு தருகிறார்கள். முந்நூறு பிரதிகள் கூட விற்காத ஒரேயொரு கவிதைத் தொகுப்பை அந்தப் பதிப்பகத்தில் கொடுத்துவிட்டு காலச்சுவடு பதிப்பகத்தில் தொடர்ச்சியாக புத்தகங்கள் வெளியிடும் பிற எழுத்தாளர்களுக்குரிய அத்தனை மரியாதையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் கண்ணன், சுகுமாரன் உள்ளிட்டவர்களோடு பேசுவது கூட இல்லை. ஒரு பதிப்பகமாக காலச்சுவடு எனக்கு எவ்வளவோ செய்கிறது. எழுத்தாளனாக காலச்சுவடுக்காக இந்த ஸ்டேட்டஸையாவது எழுதி வைக்கிறேன்! நியோ பார்ப்பான், பார்ப்பனீயம், பதிப்பக அரசியல் என்றெல்லாம் வம்பிழுக்காமல் மேற்சொன்ன விளக்கத்தில் எந்தக் கேள்வி கேட்டாலும் அது குறித்து பதில் சொல்லத் தயாராகவே இருக்கிறேன். தனிப்பட்ட அனுபவத்திலிருந்து... 

பரஸ்பரப் புரிதலில் பயணிக்கும் பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் கே.என். சிவராமன் அரசியல் உருவாக்குவதைக் கண்டித்து அபிலாஷ் எழுதிய பதிவு:



No comments:

Post a Comment